கருப்பு சட்டை அணிந்தததால் தலைமைசெயலகட்திற்குள் அனுமதி மறுப்பு..

இன்று நான்....!
நாளை....!
நேற்று தலைமைச் செயலக வாயலில் எனக்கேற்பட்ட கசப்பான உணர்வு என் இரவு உறக்கம் அனைத்தையும் மிச்சம்
வைக்காமல் விழுங்கிவிட்டது.சமூக நலத்துறை அமைச்சரிடம் என் சமூகத்திற்கான சில சலுகை கோரிக்கைகளை
எடுத்தியம்பி கோரிக்கை மனு ஒன்றை கொடுத்து வர திருநங்கை தோழிகளுடன் நான் நேற்று தலைமைச் செயலகம்
சென்றிருந்தேன்.கருப்பு நிற ஆடை அணிந்திருப்பதாகக் கூறி நான் மட்டும் தடுத்து நிறுத்தப்பட்டேன்..!
கேவலமான,மடத்தனமான,மூட புத்தியுள்ள இந்த அரசாங்கத்தை எதிர்த்து அங்கேயே தர்ணா அமர்ந்து விடலாமா என்று கூட
யோசித்தேன்.பதவியைத் தக்கவைத்துக் கொள்ள ஆரவாரமாய்,அடிமைப் புழுக்களாய் நெளிந்து கொண்டிருக்கும்
அமைச்சர்களின் அருள் பார்வைக்கு முன்னால் என் ஒடுக்கப்பட்ட பாலினத்தின் சிறு சலுகை கோரிக்கையை முன் வைப்பதே
பெரும்பாடாயிற்றே...!அதனால் காரியம் தடைபடக் கூடாது என நினைத்து மற்ற திருநங்கை தோழிகள் அமைச்சரைப் பார்க்கச்
சென்றனர். “காரியம் பெரிதா...! வீரியம் பெரிதா...! எனும் சொல்லடை சில நேரங்களில் அதிகாரத்திளுள்ளவர்களும் பல
நேரங்களில் அடக்கப்பட்டவர்களும் பயன்படுத்தக் கூடியது.பல நேரங்களைப் போலவே நேற்றும் அதே சொல்லடையைப்
பயன்படுத்தி காரியமே பெரிதெனக் கருதி வீரியத்தை ஒரு பெரும் காயமாய் மனதினுள் மறைத்து வைத்தேன்..!
அதிகாரத்திலுள்ள அந்த கனவான்களுக்கு கருப்பு நிறத்தைக் கண்டால் மட்டும் பிரச்சனயல்ல போராடும் வீரிய மாணுடத்தைக் கண்டாலும் பிரச்சனை.! ஏனெனில் 2013 ஆண்டு அக்டோபரின் ஒரு நாளில் வெள்ளை நிற உடை அணிந்துதான் நானும் என் திருநங்கைத் தோழிகளும் சென்றோம் அப்போதும் தடுத்து நிருத்தப் பட்டோம்.ஆனால் இப்போது போலல்ல அப்போது எதிர்த்துப் போராடினோம் தாக்கப்பட்டோம் கைது செய்யப்பட்டோம் !அரசின் இத்தகைய மடத்தனங்களை எதிர்த்து போராட்ட வடிவங்களால் எவ்வளவோ எதிர் வினைகளை செலுத்தினாலும் எப்போதும் அது செக்காகவே கிடக்கிறது.!
அண்ணல் அம்பேத்கர் அன்றே கூறியது போல் “சட்டம் எவ்வளவுதான் நன்மை பயப்பதாக இருப்பினும் ஆட்சி புரிபவர்கள் மோசமானவர்களாக இருப்பின் அச்சட்டத்தினால் பயனேதுமில்லை” என்றார்.! மீண்டுமொருமுறை அவர் வார்த்தையை சட்டமன்ற வாயலகத்திற்கு முன்னால் நான் நினைத்துப் பார்த்தேன் ! எவ்வளவு மோசமானவர்களாக இந்த ஆட்சியாளர்கள் கிடக்கிறார்கள்.சட்டத்தில் சொல்லப்படாத தன் மூட விருப்பங்களை எதனடிப்படையில் இவர்கள் நடைமுறைப் படுத்துகிறார்கள்.!அரசியலமைப்பின் அடிப்படைகளை தன் சொந்த விருப்பங்களுக்காக மாற்றியமைத்து ஆட்சி புரிகிறவர்கள் குற்றவாளியில்லையா..!
நேற்றைக்கு எனக்கு நேர்ந்த அந்த துன்பயியல் சம்பவத்தோடு இன்றைய நாளில் நான் வாசித்த இரு கட்டுரைகளை இணைத்துப் பார்க்கிறேன். ஒட்டுமொத்த மக்களையும் நெருங்கிக் கொண்டிருக்கும் அபாயம் எவ்வளவுக் கொடியது என்பதை எதிரெதிர் திசையில் நின்று விளக்குகிறது அக்கட்டுரைகள்..! ஒன்று “தி இந்து”நாளிதழில் சமஸ் Samas அவர்களின் ”காவி எப்படி அதிகாரத்தின் நிறமானது” என்ற கட்டுரை. ”துக்ளக்’’ எனும் வார இதழில் வெளியாகியிருக்கும் எஸ்.குருமூர்த்தி எழுதிய ”இஸ்லாமிய பயங்கரவாதம் தோன்றியது எப்படி”என்ற மற்றொருக் கட்டுரை.முன்னது உண்மையை முன்னறிவிக்கிறது பின்னது போலியை முன்னிறுத்துகிறது.சமஸ் அவர்கள், பார்ப்பனிய எதிர்ப்புக் குறியீடான கருப்பு நிறத்தை இன்றைக்கு பி.ஜே.பி.வெளிப்படையாய் அபகரித்து வருவதை சொல்லாமல் விட்டுவிட்டார். காவி ஆழமாய் கருப்பை உள்ளிழுத்து பல்லிளிப்பதை நேற்று தெளிவாய் என்னால் உணரமுடிந்தது.
எஸ்.குருமூர்த்தி அவர்கள் எவ்வளவு அழகாய் ஒரு கொடிய விஷக் கருத்தை அடுக்கி பொய்யுரைக்கிறார்.!வர்ணாசிரமத்தை உள்ளடக்கியிருக்கிற இந்த்துத்துவ பயங்கரவாதத்தை விடவா இஸ்லாமிய பயங்கரவாதம் கொடியது..!நான் எந்த மதத்தின் பயங்கரவாதத்திற்கும் ஆதரவானவள் அல்ல.ஆனால் ஒரு பயங்கரவாதக் கருத்துடையவர் இன்னொருவரை பயங்கரவாதி என்று சொல்வதை எதிர்கிறேன் அவ்வளவே..!
காவி பயங்கரவாதத்தின் சிறு இயங்கியலை வெளிப்படுத்துகிறார் சமஸ் அவர்கள்.
இஸ்லாமிய பயங்கரவாதத்தைக் காட்டி காவி பயங்கரவாதத்தை மூடி மறைக்கிறார் எஸ்.குருமூர்த்தி அவர்கள்.
நான் முன்பே கூறியது போல இவ்விரு கட்டுரைகளோடு என் நேற்றைய சம்பவத்தை இணைத்துப் பார்க்கிறேன்..!இன்றைக்கு எனக்கு நேர்ந்தது நாளை குல்லா,பர்தா அணிந்த இஸ்லாமியர்களுக்கு நடக்கப் போவதை,தலித்துகளுக்கு நிகழப்போவதை,சனநாயகவாதிகளுக்கு நிகழப்போவதை முன்னறிவிக்கிறது இவ்விருக்கட்டுரைகள்.
ஏனெனில் அவர்கள் நம்மை அபகரிக்கிறார்கள்,அவர்களின் கொடிய தத்துவத்திற்காக நம்மை வடிவமைக்கிறார்கள்..!
என்ன செய்யப் போகிறோம் நாம்...!



....மதிப்பிற்குரிய மங்கை பானு
#TransLivesMatter

Comments

Popular posts from this blog

To kill the transgender in the name of Protection of Transgender Rights Bill-2016

போர் பறவைகள்

Euthanize Us!